காதலுக்கு கண்கள் கிடையாது.. மாணவர்கள் காதல் விஷயத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு கேரள ஹைகோர்ட் குட்டு
மாணவர்களின் காதல் திருமணம் தனிப்பட்ட விஷயம், அதில் கல்லூரி நிர்வாகம் தலையிட அனுமதியில்லை என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொச்சி: கொச்சி கல்லூரி ஒன்றில் படித்துவந்த மாணவியும் மாணவனும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவர்களை கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், "காதலுக்கு கண்கள் இல்லை. காதல் மனிதனின் இயற்கையான உணர்ச்சி. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம், அவர்களுடைய சுதந்திரம் என்று கூறியுள்ளது.
கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வந்த 20 வயது மாணவி அதே கல்லூரியில் அதே துறையில் படித்துவந்த அவருடைய சீனியரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்கள் இருவரையும் கல்லூரியை விட்டு நீக்கியுள்ளது.
கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்து மாணவியும் மாணவனும் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முஹமது முஸ்டாக் விசாரித்தார்.
இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகம் தரப்பில், மாணவர்கள் படிக்கும்போது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது ஒழுங்கீனமானது. அந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முஹமது முஸ்டாக், "காதலுக்கு கண்கள் இல்லை. அது மனிதனின் இயல்பான உணர்ச்சி. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம். இது அவர்களுடைய சுதந்திரம்" என்று கூறினார்.
மேலும், நீதிபதி கூறுகையில், சிலருக்கு சில விஷயங்கள் பாவமாக இருக்கும். அது மற்றவருக்கு பாவமில்லை. ஆனால், சட்டத்தில் சுதந்திரத்துக்கு இடம் உள்ளது. அதுதான் விடுதலையின் சாரம்.
நெருக்கமான உறவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடுவதற்கு கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் கிடையாது. இதைப் புரிந்துகொள்வதைல் கல்லூரி நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
அதோடு, மாணவியையும் மாணவனையும் கல்லூரி நிர்வாகம் மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அவர்களின் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று, நீதிபதி முஹமது முஸ்டாக் உத்தரவிட்டுள்ளார்.