நவராத்திரி விழாவில் லவ் ஜிகாத்.. 4 முஸ்லிம் இளைஞர்களை வளைத்த பஜ்ரங் தள அமைப்பினர்.. கொடூர தாக்குதல்
ஆமதாபாத்: குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் லவ் ஜிகாத்தை தடுப்பதாக கூறி நவராத்திரி விழாவில் பங்கேற்ற 4 இஸ்லாமியர்கள் மீது பஜ்ரங் தள அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் உள்நோக்கத்துடன் பங்கேற்பதாக இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க
4 பேரை தாக்கும் வீடியோ
இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. அதில் 4 பேரை இந்துத்துவ அமைப்பினர் சூழ்ந்து தாக்கும் வகையில் அந்த வீடியோ இருந்தது. மேலும் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
நடந்தது என்ன?
இதுபற்றி விசாரணையில் திடுக்கிடும் சம்பவம் வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சிந்து பவன் ரோட்டில் நடந்த நவராத்தி விழாவில் 4 இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை திரும்பி செல்ல கூறியும் அவர்கள் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை பிடித்து தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
லவ் ஜிகாத்தை தடுக்க..
இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் யாரும் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. இதனால் போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுபற்றி குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செய்தி தொடர்பாளர் ஹிதேந்திரசிங் ராஜ்புட் கூறுகையில், ‛‛நவராத்தி விழாவில் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதைத் தடுக்க பஜ்ரங் தள் தொண்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். எச்சரிக்கையையும் மீறி 4 பேர் பங்கேற்றனர். லவ் ஜிகாத்தை தடுக்கும் நோக்கில் அவர்களை பிடித்து விரட்டினோம்'' என்றார்.
தீவிரப்படுத்த திட்டம்
இதுதொடர்பாக பஜ்ரங் தள் குஜராத் மாணவர் பிரிவு தலைவர் உஜ்வல் சேத் கூறுகையில், ‛‛லவ் ஜிகாத் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இதனை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு அதனை தீவிரப்படுத்த உள்ளோம்'' எனக் கூறியுள்ளார்.