மதத்தை மறைத்து திருமணம் செய்து மதம் மாற்ற முயற்சி: துப்பாக்கி சுடும் வீராங்கனை கணவர் கைது
டெல்லி: பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து மதம்மாற்ற (லவ் ஜிகாத்) முயன்ற குற்றத்திற்காக தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா ஷாடியோவின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தேசிய துப்பாக்கி சூடுதல் வீராங்கனை தாரா ஷாடியோ (23). ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரஞ்ஜீத் சிங் கோலி (30) என்ற வாலிபருடன் தாராவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் ஆகியுள்ளது.
இருவருக்கும் இந்துமத சடங்குகள் படி திருமணம் நடந்தது. இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். தாராவிடம் ரஞ்சீத் தான் ஒரு இந்து என்று கூறியுள்ளார்.
ஆனால் கடந்த ரமலான் மாதத்தில் இப்தார் விருதில் கலந்துகொள்ளும்படி ரஞ்ஜீத் சிங் கோலிக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போதுதான் தாராவிற்கு ரஞ்ஜீத் சிங் கோலியின் உண்மையான பெயர் ரஹிபுல் ஹூசைன் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி தாரா ஷாடியோவை ரஞ்ஜீத் சிங் கோலி கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தாரா ஷாடியோ ஜார்க்கண்ட் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் கிரிமினல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் போலீசார் தாராவின் கணவரை டெல்லி அருகே கைது செய்துள்ளனர்.
மீரட்டில், இந்து பெண்ணை பலாத்காரம் செய்து மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், துப்பாக்கி சுடும் வீராங்கனையும் இதுபோன்ற ஏமாற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.