1962க்கு பிறகு முதல்முறையாக, ராணுவத்திற்கு கிள்ளிக்கொடுத்த பட்ஜெட்! தோட்டா வாங்க காசு இருக்குமா?
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்துறைக்கு ரூ.2.58 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.71 சதவீதம் மட்டுமே என்பதால், 1962ம் ஆண்டுக்கு பிறகு (சீனாவுடனான போர் காலகட்டம்) ராணுவத்திற்கு இந்தியா ஒதுக்கிய மிக குறைந்த தொகையாக இது பார்க்கப்படுகிறது.
ராணுவத்தளவாடங்கள் கொள்முதல் செய்யவும், ராணுவத்தை நவீனப்படுத்தவும் இந்த நிதி போதாது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள்.
2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில், கடந்த திங்கள்கிழமை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத புதுமையாக, ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவிப்பு வெளியாகாதது, மர்மத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவத்திற்கு அரசு ரூ.2.58 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் இது 1.71 சதவீதம் மட்டுமேயாகும்.
நாடாளுமன்ற நிலைக்குழு, தாக்கல் செய்த பரிந்துரையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாவது ராணுவத்திற்கு ஒதுக்குவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1985ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக, ராணுவத்திற்கு ஒதுக்கிய நிதியுடன், ராணுவத்தினரின் ஓய்வூதிய திட்டமும், சேர்க்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.82,332 கோடியையும் சேர்த்தால், ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு ரூ.3.4 லட்சம் கோடியாக உயரும். அப்படிப்பார்த்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் மதிப்பு 2.26 சதவீதமாகவே இருக்கும்.
கடந்த பட்ஜெட்டைவிட, இம்முறை, பாதுகாப்புத்துறைக்கு கூடுதலாக, 1.16 சதவீதமே, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் ஓப்பந்தம் செய்யப்பட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வதிலேயே இதில், 60 விழுக்காடு நிதி செலவாகிவிடும் நிலை உள்ளதால், புதிய ஆயுத கொள்முதல், ராணுவ நவீனத்துவம் போன்றவற்றுக்கு நிதியை திரட்டுவது எப்படி என்பது பாதுகாப்புத்துறையின் முன்னால் கேள்வியாக கிளம்பியுள்ளது.