சமையல் எரிவாயு கட்டுப்பாடு தளர்வு... எப்போது வேண்டுமானாலும் பெறலாம்!
டெல்லி: மாதத்துக்கு ஒரு எரிவாயு சிலிண்டர்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது. ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய சலுகையை அளித்துள்ளது.
நாடு முழுவதும், மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், முந்தைய மன்மோகன்சிங் அரசு, கடந்த பிப்ரவரி 28-ந் தேதி இந்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது.
அதே சமயத்தில், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்தது. இந்த கட்டுப்பாட்டால், சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இனிமேல், ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள், வழக்கம் போல, அதை சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.