அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய 450 கேஸ் சிலிண்டர்கள்..ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ச்சேதம்தவிர்ப்பு
அமிர்தசரஸ் : பஞ்சாப்பின் தொழில்நகரமான லூதியானா வழியாக சென்ற லாரியில் இருந்த சுமார் 450 எரிவாயு சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அங்குள்ள நூர்மஹால் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நிரப்பப்பட்ட சிலிண்டர்களை ஏற்றி வந்த அந்த லாரி மச்சிவாரா பகுதியை நெருங்கியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதி சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் நிலை தடுமாறி இறங்கியது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிலிண்டர்கள் ஒன்றோடொன்று குலுங்கி உரசின.
இதனால் லாரியில் வைக்கப்பட்டிருந்த அத்தனை சிலிண்டர்களும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வெடித்து, சிதறின.
கிழிந்த சிலிண்டர்களின் இரும்பு பாகங்கள் பல நூறு மீட்டர் தூரத்துக்கு சிதறித் தெறித்தது. அதிர்ஷ்டவசமாக, முதல் சிலிண்டர் வெடித்தபோதே அந்த லாரியின் ஓட்டுநரும், கிளீனரும் அங்கிருந்து தப்பியோடி, உயிர் பிழைத்தனர்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.