சமையல் கேஸ் வினியோகஸ்தர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
மும்பை: மும்பையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் கேஸ் வினியோகஸ்தர்களின் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு சமச்சீரான விலை நிர்ணயம் செய்யக்கோரியும், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் மூலம் அதிக அளவு அபராத தொகை விதிக்கப்படுவது, வினியோக கொள்கை தொடர்பான விதிமுறைகளை நெறிப்படுத்துவது, புதிய வினியோகஸ்தர்களை நியமிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி இன்று முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கேஸ் வினியோகஸ்தர்களின் அகில இந்திய சம்மேளனம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் அகில இந்திய கேஸ் வினியோகஸ்தர்கள் சம்மேளன கூட்டமைப்பு நிர்வாகிகள் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எண்ணெய் நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் மற்றும் கேஸ் வினியோகஸ்தர் கூட்டமைப்பினர் இடையே நடைபெற்ற இப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கேஸ் வினியோகஸ்தர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வழக்கம்போல் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வினியோகம் நடைபெறும். பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றியும் சமையல் கேஸ் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். முன்பதிவும் வழக்கம்போல் நடைபெறும்.