ஷாக்கிங்... சமையல் காஸ் சிலிண்டர் மானியம் ரத்து.. மாதம் ரூ4 விலை உயர்வு!
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தைஇ வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு மானிய தொகையை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை தொடங்கியது.
அதாவது நேரடி மானிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு செலுத்தும் அனைத்து மானியங்களும் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
வங்கிக் கணக்கில் வரவு
சென்னையை பொருத்தவரை மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ.574-க்கு விற்கப்படுகிறது. அதில் மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை ரூ.434 ஆகும். மீதமுள்ள ரூ.140 பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மானியத்தில் கை வைத்த மத்திய அரசு
இந்நிலையில் வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதா மாதம் விலை உயரும்
தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதம் ரூ.2-ஆக உயர்த்தி வருவதை இரட்டிப்பாக்கி ரூ. 4 வீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
மக்களுக்குப் பாதிப்பு வரும்
இதுதொடர்பாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் முதல் இதுவரை எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.58 உயர்ந்துள்ளது.
இந்த புதிய விலை உயர்வு அறிவிப்பால் மக்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.