மே.வங்கத்தில் காவிப்படையாகவே மாறிய 'செங்கொடி' தோழர்கள்.... மமதாவுக்கு எதிரான வியூகமாம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் கைகோர்த்து செயல்படுவது அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாஜகவின் பரம வைரிகள் இடதுசாரிகள் என்கிற தோற்றம் உண்டு. ஆனால் பல நேரங்களில் பாஜகவின் மென்மை முகமாக இடதுசாரிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது வாடிக்கை.
முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரம், ஈழத் தமிழர் பிரச்சனை என பலவற்றிலும் அப்படியான ஒரு மறைமுக பாஜக குரலைத்தான் இடதுசாரிகள் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில் தேர்தல்களின் போது இடதுசாரிகளும் பாஜகவினரும் கை கோர்ப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் அரசை வீழ்த்திய மமதா தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகிறார். அம்மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்டகால திட்டம்.
லோக்சபா தேர்தல்: அனல் பறக்கும் ராஜீவ் மீதான புகார்கள்... எல்லாமே 'வாக்கு வங்கி' அரசியல்?
தற்போதைய லோக்சபா தேர்தலில் மமதாவுக்கு எதிராக களத்தில் இடதுசாரிகளும் பாஜகவும் இருக்கின்றனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் பாஜகவும் இடதுசாரிகளும் கோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அதுவும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி தொண்டர்கள் கொடி, கோஷம் இல்லாமல் தங்களை உருமாற்றிக் கொண்டு காவிப்படையின் அங்கமாகவே 'களமாடுகின்றனர்'. இது தொடர்பாக தமது கட்சியினரை மமதா பானர்ஜியும் எச்சரித்தும் உள்ளார்.
'நமது எதிரிகள் இருவரும் கை கோர்த்து செயல்படுகின்றனர்.... மிகவும் கவனமாக களப்பணியாற்றுங்கள்' என திரிணாமுல் தொண்டர்களுக்கு மமதா பானர்ஜி கட்டளையிட்டுள்ளார். இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் கேரளாவைத் தவிர இனி எங்கும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாத நிலையில் உள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை வீழ்த்த அல்லது ஆட்சி அதிகாரத்தை ஒரு கட்சி கைப்பற்றுவதைத் தடுக்கும் ஒரு 'துணைப் படை'யாகவே அக்கட்சி மாறிவிட்டதையே மேற்கு வங்க களம் வெளிப்படுத்துக்கிறது.