தெலுங்கானா உருவானதும் சீமாந்திராவுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: சந்திரசேகர ராவ்
நகரி: தெலங்கானா மாநிலம் உதயத்திற்குப் பிறகு சீமாந்திராவுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ்..
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலங்கானா தனி மாநிலமாக வரும் ஜூன் 2ம் தேதி உதயமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அன்றைய தினம் முதலே அம்மாநிலம் தனியாக செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் ஹைதராபாத்தில் சந்திரசேகர ராவ் முன்னிலையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் முன்னிலையில் சந்திரசேகரராவ் கூறியதாவது:-
தெலங்கானா மாநிலம் உதயமானதும் இங்குள்ள நீர்த் தேக்கங்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சீமாந்திராவுக்கு தர மாட்டோம். எங்கள் தேவை போக எஞ்சிய தண்ணீரைத்தான் விடுவிப்போம்.
மேலும், தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் தான் இங்குள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்ற முடியும். சீமாந்திராவை சேர்ந்தவர்கள் அங்கு சென்று விட வேண்டியதுதான். கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்களை சீமாந்திராவுடன் இணைக்கவிட மாட்டோம்" என அவர் இவ்வாறு மிரட்டும் தொனியில் தெரிவித்துள்ளார்.