'ப்ளூ கார்னர் நோட்டீஸ் குற்றவாளி' லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ராஜினாமா செய்க: காங். வலியுறுத்தல்!
டெல்லி: பொருளாதார குற்றங்களுக்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எப்படி உதவலாம்? சுஷ்மா ஸ்வராஜ் சட்டவிதிகளை மீறியிருப்பதை எப்படி மத்திய அரசு ஏற்கிறது? அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என்று லோக்சபாவில் காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.
இந்திய நீதிமன்றத்தால் தேடப்படுகிற குற்றவாளியான இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி 2 வார காலமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக முதலில் கூறிய சுஷ்மா ஸ்வராஜ், தாம் லலித் மோடிக்கு உதவியதாக ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? என்று அந்தர் பல்டியும் அடித்தார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுஷ்மா ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் லோக்சபாவில் திடீரென லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். மொத்தம் 2 மணி நேரம் 30 நிமிடம் இந்த விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விவாதத்தைத் தொடங்கி வைத்து லோக்சபா காங்கிரஸ் கட்சிக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோவிலும் டிவியிலும் பேசுகிறார்.. அவர் இங்கே இந்த விவாதத்துக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
லலித் மோடிக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் சுஷ்மா ஸ்வராஜ் அவருக்கு உதவியது ஏன்? சுஷ்மாவின் குடும்பத்தினர் லலித் மோடியின் வழக்கறிஞர்களாக இருப்பதால் அவரைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்.
லலித் மோடியின் பொருளாதார குற்றங்களைப் பற்றி தெரிந்த பின்னரும் உரிய விசாரணைக்கு நிதி அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சுஷ்மா ஸ்வராஜ் சட்ட விதிகளை மீறி இருப்பதை ஏற்பதற்கு மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?
இந்த விவாதத்தை முன்னரே நடத்தியிருந்தால் நாடாளுமன்றத்தின் நேரம் மிச்சமாகியிருக்கும். இந்த விரயத்துக்கு பிரதமரும் மத்திய அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
லலித் மோடிக்கு உதவ விரும்பியிருந்தால் அவரை இந்தியாவுக்கு வருமாறுதான் சுஷ்மா கூறியிருக்க வேண்டுமே தவிர சட்ட விதிகளை மீறி உதவி செய்திருக்கக் கூடாது. ரூ460 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்த ஒரு நபருக்கு எப்படி மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா உதவி செய்யலாம்?
ஆகையால் தார்மீக அடிப்படையில் சுஷ்மா ஸ்வராஜ் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.