நாடாளுமன்றத்தில் கண்ணியத்தை நிலைநாட்டுங்கள்.... சபாநாயகர் எம்.பிக்களுக்கு கடிதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும், அவையின் புனிதம் கருதி கண்ணியத்துடன் நடந்து கொள்ளுங்கள் என அனைத்து கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் வியாபம் முறைகேடு, லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தற்போது குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், சகிப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கையில் எடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இநிலையில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு அனைத்து கட்சி எம்பிக்களுக்கும் சுமித்ரா மகாஜன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், அனைவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது கண்ணியமான நடவடிக்கையைத்தான். ஒரு சபாநாயகர் என்ற முறையில் நான் உங்கள் அனைவரிடமும் மக்களவையில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜனநாயகத்தின் கோயிலாக இந்த நாடாளுமன்றம் கருதப்படுகிறது. எனவே அனைவரும் இந்த அவையின் புனிதத்தை மதித்து, மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கருத்து மோதல்கள் ஏற்படும் போது நம் கண்ணியத்தை நாம் காற்றில் பறக்க விட்டுவிடக் கூடாது. அவ்வாறு கண்ணியத்தை தவற விடும்போது நமது நாட்டை பற்றியும் ஒரு தவறான கருத்தை உருவாக்க நாமே காரணமாக இருந்து விடுகிறோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசித் தீர்வு காண வேண்டும், என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.