புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் நியமனம்
டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங்கின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 31ம் தேதி முடிகிறது. இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் தேர்வு செய்யப்பட்டார். அவரின் தேர்வை அங்கீகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 59 வயதாகும் தல்பீர் ராணுவ தளபதியாக பதவி ஏற்றதில் இருந்து 30 மாதங்கள் அந்த பணியை தொடர்வார்.
ராஜஸ்தான் மாநிலம் சிட்டோகரில் உள்ள சைனிக் பள்ளியில் படித்த தல்பீர் 1970ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். அவர் பாதுகாப்பு தொடர்பாக டெல்லி, செகந்திராபாத் ஆகிய இடங்களிலும், அமெரிக்கா, கென்யா ஆகிய நாடுகளிலும் படித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவர் கார்கிலில் ஒரு ராணுவ பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
தல்பீர் கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் 16ம் தேதி கிழக்கு ராணுவ கமாண்டராக பதவி ஏற்றார். பிக்கரம் சிங்கின் பதவிக்காலம் முடிய இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தல்பீர் புதிய ராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ தளபதியை புதிய அரசு வந்து தேர்வு செய்யலாம் அப்படி இருக்கையில் எதற்காக அவசரமாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.