இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் அரசுக்கு தெளிவான நோக்கம் இல்லை- மவுனம் கலைத்த மாஜி தளபதி!
1987-ல் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்த அப்போதைய ராஜீவ் காந்தி அரசுக்கு தெளிவான நோக்கம் எதுவுமே இல்லை என அதன் ராணுவ தளபதியாக இருந்த லெப். ஜெனரல் தீபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்: 1987-ல் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்த அப்போதைய ராஜீவ் காந்தி அரசுக்கு தெளிவான நோக்கம் எதுவுமே இல்லை என அதன் ராணுவ தளபதியாக இருந்த லெப். ஜெனரல் தீபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் ராணுவ இலக்கியத் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதில் இலங்கையில் இந்திய அமைதிப்படை குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.
மனம் திறந்த தீபேந்தர்
இக்கருத்தரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் கண் பார்வையையும் வலது கை விரல்களையும் இழந்த கர்னல் அனில் கவுல், அமைதிப் படைக்கான தளபதி லெப். ஜெனரல் தீபேந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய அனில் கவுல், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த காலங்களை நினைவு கூர்ந்தார். பின்னர் தீபேந்தர் சிங் பேசியதாவது:
அமைதிப் படை பலம் குறைவு
இந்திய அமைதிப்படை ஆபரேஷன் பவன் என்ற பெயரில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொண்டது. தொடக்கத்தில் முப்படைகளையும் உள்ளடக்கியதாகவே அமைதிப் படை இருந்தது. ஆனால் கடற்படை, விமானப் படையின் பங்களிப்பானது மெது மெதுவாக குறைந்துவிட்டது.
எனக்கும் குழப்பமே
அத்துடன் எதற்காக நாங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம் என்பதற்கான தெளிவான அரசியல் இலக்கும் அப்போதைய மத்திய அரசுக்கு இல்லை. எனக்கும் கூட நாங்கள் விடுதலைப் புலிகளை பாதுக்காக்க சென்றிருக்கிறோமா? இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க அனுப்பி வைக்கப்பட்டோமா என்கிற குழப்பம் இருந்தது. அதேபோல் இலங்கைக்கு இந்திய அமைதிப் படையின் கட்டளை தளபதியாக சென்றேனா அல்லது ராணுவ ஆளுநராக சென்றேனா என்பதிலும் குழப்பம் இருந்தது.
உயிரிழப்பு அதிகம்
நாங்கள் யாரைத்தான் குறை சொல்வது? இந்திய அமைதிப்படையின் ஆபரேஷன் பவன் நடவடிக்கையில் பெரும் விலைகொடுத்து பாடம் கற்றுக் கொண்டோம். பெருமளவு உயிரிழப்புகளையும் எதிர்கொண்டோம்.
இவ்வாறு தீபேந்தர் சிங் கூறினார்.