ஏன் முஸ்லீமை திருமணம் செய்தீர்கள்.. இந்து பெண்ணிடம் கேட்ட பாஸ்போர்ட் அதிகாரி.. அதிரடி பணியிட மாற்றம்
இந்து - முஸ்லிம் தம்பதியை அவமதித்த பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஷ்ரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
லக்னோ: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த இந்து - முஸ்லிம் தம்பதியை அவமானப்படுத்திய பாஸ்போர்ட் அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தன்வி சேத் - மொஹமது அனஸ் சித்திக் என்ற இந்த இந்து - முஸ்லிம் தம்பதியினர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த தங்களை லக்னோ பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஷ்ரா அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
2007 ஆம் ஆண்டு தன்வி சேத்தும் மொஹமது அனஸ் சித்திக்கும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் நொய்டாவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பாஸ்போர்ட் கேட்டு லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பாஸ்போர்ட் அதிகாரி மிஷ்ரா, தன்வி சேத் இந்து என்பதாலும், அவருடைய் கணவர் மொஹமது அனஸ் சித்திக் முஸ்லிம் என்பதாலும் அவமரியாதையாகப் பேசியுள்ளார். மேலும், சித்திக்கை இந்து மதத்துக்கு மாறச் சொல்லியிருக்கிறார்.
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மொஹமது அனஸ் சித்திக் "எனது மனைவியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் கணவர் பெயர் முஸ்லிம் பெயர் இருப்பதைப் பார்த்த மிஷ்ரா எனது மனைவியைத் திட்டினார். அவள் என்னை திருமணம் செய்திருக்க கூடாது என்று கூறினார். இதைக் கேட்ட எனது மனைவி உடைந்து அழுதுவிட்டார்" என்று கூறியுள்ளார்.
பாஸ்போர்ட் அதிகாரியால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையால், மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட, தன்வி சித்திக் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜின் டிவிட்டர் பக்கத்தில் இது பற்றி புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், மேடம் உங்கள் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை வைத்து எழுதுகிறேன்.
நான் மிகப்பெரிய துயரத்தில் இருக்கிறேன். லக்னோவில் உள்ள ரத்தன் சதுக்கம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் அதிகாரியால் அவமதிக்கப்பட்டேன். இதற்கு காரணம் நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்துகொண்டதுதான். அவர் என்னிடம் மிகவும் சத்தமாக மற்றவர்களுக்கு கேட்கும்படி கடுமையாகப் பேசினார்.
இது போல நான் மன ரீதியாக எப்போதும் தாக்கப்பட்டதில்லை. இதை அந்த அலுவலகத்தில் வேலை செய்த மற்ற பணியாளர்களும் அறிவார்கள். பாஸ்போர்ட் அலுவலகம் மாதிரியான ஒரு இடத்தில் இதை நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. அவ எங்களுக்கு பாஸ்போர்ட் தரவில்லை. அவர் எங்கள் பாஸ்போர்ட்டை நிறுத்தி வைத்துள்ளார். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
நான் எனது கணவரை திருமணம் செய்துகொண்ட இந்த 12 ஆண்டுகளில் இது போல நான் அவமதிக்கப்பட்டதில்லை. என்னுடைய திருமணத்துக்குப் பிறகு எனது பெயரை மாற்றிக்கொள்வது என்பது எனது தனிப்பட்ட தேர்வு. இது எங்களுடைய குடும்ப பிரச்சனை. அதனால், எங்களை அவமதித்த பாஸ்போர்ட் அதிகாரியை விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவர் என்னுடைய கணவரிடம் பேசும்போது நீ திருமணத்துக்கு பிறகு உன்னுடய பெயரை மாற்றிக்கொள்ள வேண்டியது உனது கடமை." என்று தன்வி சேத் சித்திக் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்வி சேத் சித்திக் தெரிவித்த முறையீட்டை அடுத்து சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, லக்னோ பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஷ்ரா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மொஹமது அனஸ் சித்திக் தன்வி சேத் சித்திக் ஆகிய இருவருக்கும் அவர்களுடைய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.