ஜே.என்.யூ. மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர் ஆதரவு பெருகிறது.. லக்னோ மாணவர்கள் அறிக்கை
Recommended Video
டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு, தேசிய அளவில் பிற பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு பெருகி வருகிறது. லக்னோ பல்கலைக்கழக மாணவர்கள், இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
"லக்னோ பல்கலைக்கழக மாணவர்களாக நாங்கள் நடைபெற்று வரும் ஜே.என்.யூ மாணவர் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம். மாணவர் இயக்கம் கடுமையாக நசுக்கப்படுவதையும், இந்த நேரத்தில் அவர்களின் குரலை நொறுக்குவதற்கான கடுமையான அச்சுறுத்தல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம்" என்று லக்னோ பல்கலை. மாணவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இன்று ஜே.என்.யூ மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், சுமார் 6 மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜே.என்.யூ. பல்கலைக் கழக விடுதி கட்டணங்கள் 300% உயர்த்தப்பட்டது. மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர் அமைப்புகளின் தலைவர்களுக்கான அபராதத் தொகையும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டது. இவற்றை கைவிட வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில்தான், சப்தர்ஜங் சமாதி பகுதியில் கூடியிருந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை எழுந்தது.தகவல் கிடைத்ததும் எஞ்சிய மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மத்திய அரசின்கீழ் செயல்படும் பிற பல்கலைக்கழகங்களிலும், கட்டண உயர்வு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவேதான், பிற பகுதி மாணவர்களும் டெல்லி மாணவர்களுக்கு ஆதரவுக் கரத்தை நீட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, போராடக்கூடிய ஜே.என்.யூ. மாணவர்களுடன், பல்கலைக்கழக, நிர்வாகிகள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே காவல்துறையினர் தங்களுடன் மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அழைப்புவிடுத்துள்ளனர்.