வால்மீகி பற்றி சர்ச்சை கருத்து.. நடிகை ராக்கி சாவந்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!
நடிகை ராக்கி சாவந்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து லூதியான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லூதியானா: ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது.
இந்தி பட உலகில் தனது படுபயங்கர கவர்ச்சியால் அனைவரையும் கதிகலங்க வைத்தவர் ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன இவர், கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது ராமாயணம் எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த நரிந்தர் ஆதியா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் வால்மீகி சமூகத்துக்கு எதிராகவும் இந்து மதத்தை புண் படுத்தும் வகையிலும் ராக்கி சாவந்த் பேசி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து லூதியானா நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை ராக்கி சாவந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதை ராக்கி சாவந்த் தவிர்த்து வந்தார். இந்நிலையில் மீண்டும் நடிகை ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.