சந்திரகிரகணம் 2019: பழனி, திருப்பதியில் நாளை மாலைக்கு மேல் சாமி பார்க்க முடியாது
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை 16ம் தேதி இரவு 7 மணி முதல் 17ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி: சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட உள்ளன. ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுவதால் பக்தர்கள் அதற்கேற்ப பயணங்களை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும் பௌர்ணமி நாளில் அதாவது ஜூலை 16 ஆம் தேதி இரவு தனுசு ராசியில் சந்திரன் கேது சனியோடு இணைந்திருக்க, சூரியன் ராகு சம சப்தம ராசியில் நின்று கொண்டிருக்கும்.
இந்தச் சந்திர கிரகணம், சம்பூர்ண கிரகணம் என்பதால் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களுக்கு உட்பட்ட அனைத்து கோவில்களும் 6 மணி நேரத்துக்கு முன்பாகவே, நாளை மாலை 6 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோவில்களும் நாளை இரவு 8 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை நடை அடைக்கப்படுகின்றன. பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியில் செயல்பட்டு வரும் அன்னதான கவுன்ட்டர்களும் மூடப்படும்.
சர்வ தரிசன அனுமதி
ஜூலை 17ஆம் தேதி அதிகாலையில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும் நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
பக்தர்கள் அனுமதி
ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு 16 ஆம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளதால் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோன்று 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ,வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காளஹஸ்தியில் சிறப்பு பூஜை
கிரகணத்தின் போது காளஹஸ்தி கோவிலை மட்டும் மூட மாட்டார்கள். இதற்கு காரணம், இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. அதனால் இங்கே கிரகணங்களின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஜூலை 16ஆம் தேதி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கோவில்கள் மூடல்
திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் பழனி முருகன் கோவிலிலும் நாளை இரவு 8 மணி முதல் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். கிரகணம் முடிந்த பின்னர் கோவிலில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.