ரூ.4 லட்சம் சம்பள ஆசையால் துபாய்க்கு சென்ற இளம் பேஷன் டிசைனர் 13 பேரால் பலாத்காரம்
மும்பை: மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் தருகிறேன் என்று ஏமாற்றி மும்பையில் இருந்து துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட 27 வயது பேஷன் டிசைனர் 13 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது ரோசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கடந்த ஆண்டு மே மாதம் 13ம் தேதி மும்பை கர் பகுதியில் டிசைனர் ஆடைகள் விற்கும் மேம்சாப் என்ற கடை வைத்துள்ள அஞ்சலி அக்ரவாலை சந்தித்தார். முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேனேஜராக இருந்த ரோசி பேஷன் டிசைனிங் படிப்பில் டிப்ளமோ முடித்தவர்.
பேஷன் டிசைனிங்கில் சாதிக்க வேண்டும் என்று துடித்த அவரிடம் அஞ்சலி தனக்கு துபாயில் மேம்சாப் என்ற கடை உள்ளது. அதற்கு துணை மேனேஜர் ஒருவர் வேண்டும். மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தர தயார் என்றார். இதை கேட்ட ரோசி கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி துபாய் கிளம்பிச் சென்றார். முன்னதாக விசா செலவுக்காக ரோசி அஞ்சலிக்கு தனது உறவினரிடம் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்தார்.
அங்கு சென்றதும் அஞ்சலி ரோசியின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார். அவரை அடுக்குமாடி குடியிருப்பின் 17வது மாடியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்தார் அஞ்சலி. ரோசியை 13 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். துபாய் சென்ற 25வது நாள் அஞ்சலி ரோசியிடம் அவரது பாஸ்போர்ட்டை கொடுத்தார். அன்றே ரோசி மும்பை திரும்பி போலீசில் தனக்கு நடந்த கொடுமை பற்றி புகார் கொடுத்தார்.
போலீசாரின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துள்ள ரோசி விரைவில் நீதிமன்றத்தை அணுகவிருப்பதாக தெரிவித்தார்.