மராத்தியர்களுக்கு 16%; முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு: மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்!
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16%; முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மராத்தா சமூகத்தினரும், சிறுபான்மையினரான முஸ்லிம்களும் தங்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
அண்மையில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமானால் மராத்தா மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியாக வேண்டும் என்ற நெருக்கடி ஆளும் அரசுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை முதல்வர் சவான் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16%; முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த இடஒதுக்கீட்டு முடிவுக்கு அம்மாநில பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.