எடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்ற மாஃபா பாண்டியராஜன்!
முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திரும்பப் பெற்றுள்ளார்.
டெல்லி : முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதையடுத்து வழக்கை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறது அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். சசிகலா அணி பின்னர் முதல்வர் பழனிசாமி அணியானது, இந்நிலையில் சசிகலா அணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றதால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியை இழந்தார் மாஃபா பாண்டியராஜன்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்டு வந்த அவர் சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி பாண்டியராஜன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைக்கப்பட்ட வேண்டுகோளை பேரவைத் தலைவர் நிராகரித்திருக்க கூடாது என்ற அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் பாண்டியராஜன் கோரியிருந்தார்.
அணிகள் இணைப்பு
இந்த மனு மீதான விசாரணை கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அதிமுகவின் முதல்வர் பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. இந்த இணைப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், மாஃபா பாண்டியராஜனுக்கு தொல்லியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து மாஃபா பாண்டியராஜன் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினார். அணிகள் இணைந்து விட்டதால் இந்த மனுவை திரும்பப் பெறுவதாகவும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இதனை ஏற்ற நீதிபதிகள் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கினர். இதனையடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.