நிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா குற்றவாளி- சிபிஐ கோர்ட் தீர்ப்பு
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவை குற்றவாளி என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
2006- 2008 ஆம் ஆண்டு காலத்தில் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் மதுகோடா. தமது ஆட்சி காலத்தில் மேற்கு வங்க தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்தார் என்பது குற்றச்சாட்டு.
இது தொடர்பாக மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஏ.கே. பாஸ் உள்ளிட்டோர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் மதுகோடா, குப்தா உள்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் 4 பேரை விடுவித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளது.