ம.பியில் திருப்பம்.. காங். எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா.. 3 பேர் ரிசார்ட்டில்.. கலக்கத்தில் கமல்நாத்!
மத்திய பிரதேசத்தில் 4 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கி உள்ள நிலையில், அதில் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
போபால்: மத்திய பிரதேசத்தில் 4 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கி உள்ள நிலையில், அதில் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்து இருக்கிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டது.
இதில் தற்போது வரை 6 எம்எல்ஏக்கள் மீட்டக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கடத்தப்பட்ட எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ரிசார்ட்
இதனால் அங்கு ரிசார்ட் அரசியல் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. டெல்லி அருகே குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் இவர்கள் எல்லோரும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் கர்நாடகாவில் ஒரு தனியார் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் புகாரின்படி, மொத்தம் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் பாஜகவினர் மூலம் கடத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
வந்தனர்
அவர்களின் 6 பேர் திரும்பி வந்துவிட்டனர். இன்னும் 4 பேர் அந்த ஹோட்டலில் இருக்கிறார்கள். அதன்படி ஹர்தீப் சிங் டாங் , ரகுராஜ் கான்சானா, பிசாலால் சிங் , மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஷேரா பையா ஆகியோர் ஹோட்டலில் இருக்கிறார்கள். இவர்களில் தற்போது ஹர்தீப் சிங் டாங் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார். இதற்காக அவர் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
ராஜினாமா கடிதம்
அதன்படி ஹர்தீப் சிங் டாங் அளித்துள்ள பேட்டியில், இது நான் சுயமாக எடுத்த முடிவு. எனக்கு இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை. இந்த அரசு ஊழல் நிறைந்த அரசாக மாறிவிட்டது. அமைச்சர்கள் யாரும் சரியாக பணியாற்றவில்லை. எனக்கு சரியான சுதந்திரம் இல்லை. இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆகியும் என்னால் மக்களுக்கு சரியான சேவை செய்ய முடியவில்லை, என்று கூறியுள்ளார்.
மறுப்பு
ஆனால் இது தொடர்பாக முதல்வர் கமல்நாத் வேறு பேட்டி அளித்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் டாங் கட்சிக்கு நெருக்கம் ஆனவர். அவரிடம் பேச நாங்கள் தயார். அவர் ராஜினாமா செய்வதாக எங்களுக்கு தகவல் மட்டுமே வந்துள்ளது. அதிகாரபூர்வ கடிதம் எதுவும் வரவில்லை. அது வந்த பின் பார்க்கலாம். ஆனால் ஹர்தீப் சிங் டாங் உடன் சந்திப்பு நடத்திய, அவரிடம் பேசிய பின்பே இதில் நாங்கள் முடிவு எடுப்போம் என்று கமல்நாத் தெரிவித்துள்ளார் .