ஜோதிராதித்யா சிந்தியா விலகலைத் தொடர்ந்து 22 ம.பி காங். எம்.எல்.ஏக்கள் அதிரடி ராஜினாமா!
போபால்: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா விலகிய நிலையில் அவரது ஆதரவாளர்களான 22 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஜோதிராதித்யா சிந்தியா. இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் சிந்தியா அறிவித்தார். அதேநேரத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சிந்தியாவை டிஸ்மிஸ் செய்து காங்கிரஸ் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த பரபரப்பான திருப்பங்களைத் தொடர்ந்து ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 மத்திய பிரதேச எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார். 22 பேரும் ஆளுநர் லால்ஜி தாண்டனுக்கு இ மெயில் மூலம் தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் 228 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கமல்நாத்துக்கு 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தற்போது 22 பேர் ராஜினாமா செய்துள்ளதால் கமல்நாத்துக்கான ஆதரவு 99 ஆக குறைந்துள்ளது. இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்வதும் பாஜக ஆட்சி அமைப்பதும் உறுதியாகி உள்ளது.