ம.பியில் திடீர் திருப்பம்.. பின்வாங்கிய அமித் ஷா.. பல்டி அடித்த பாஜக!
மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோராது என்று அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோராது என்று அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். பாஜகவினர் இந்த திடீர் மனமாற்றத்திற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.
மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை.
தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக இரண்டு கட்சிகளும் மெஜாரிட்டி பெறுவதற்கான இடங்களில் வெற்றிபெறவில்லை. மத்திய பிரதேசத்தில், பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.
உரிமை கோரியது
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. இதற்காக இன்று மதியம் ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தருவதால் காங்கிரஸ் ஆட்சி உறுதியாகி உள்ளது.
ஒப்புக்கொண்டார்
நேற்று இரவே காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர ஆசைப்பட்ட ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டது. ஆனால் ஆளுநர் அப்போது நேரம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸுக்கு ஆளுநர் ஆனந்திபென் பாட்டீல் அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக என்ன
இதற்கு மத்தியில் பாஜகவும் மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பாட்டீலை சந்திக்க அனுமதி கேட்டு இருப்பதாக தகவல்கள் வந்தது. சுயேட்சைகள் உதவியுடன் பாஜக ஆட்சி அமைக்க முயல்வதாக தகவல்கள் வந்தது. இதனால் மத்திய பிரதேசத்தில் குதிரை பேரம், ரெசார்ட் அரசியல் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் அந்த செய்தியை தற்போது பாஜக மறுத்து இருக்கிறது. அதன்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர போவதில்லை. ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளேன் , இன்று மதியம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்
பாஜக இப்படி திடீர் என்று முடிவெடுக்க கர்நாடக தேர்தல் முடிவுகளும் காரணம். அங்கு பெரும்பான்மை பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் கொட்டு வைத்து இருந்தது. அப்போது ஆளுநர் எடுத்த முடிவிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. கர்நாடகாவில் பாஜக எவ்வளவு முயன்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை. கடைசியில் கெட்ட பெயர் எடுத்ததே மிச்சம். அதனால் மத்திய பிரதேசத்தில் அந்த நிலை ஏற்பட கூடாது என்று பாஜக பின்வாங்கி உள்ளது.