பாஜகவிற்கு புதிய தலைவலி.. ம.பியில் காங்கிரஸுடன் கைகோர்க்கிறது பகுஜன் சமாஜ்!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் கடந்த ஒரு மாதம் முழுக்க தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலின் செமி பைனலாக பார்க்கப்பட்டது.
இதில் அதிக கவனம் ஈர்த்த மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.
என்ன வரலாறு
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது.
நெக் டு நெக்
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரங்கள் படி மத்திய பிரதேசத்தில், பாஜக 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸும் 110 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை.
உதவி தேவை
இதனால் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிக்கும் சுயேட்சைகள் ஆதரவோ, பகுஜன் சமாஜ் ஆதரவோ, இல்லை கம்யூனிஸ்டுகளின் ஆதரவோ தேவை. அங்கு சுயேச்சை 4 இடத்திலும், பகுஜன் சமாஜ் 3 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
ஆதரவு அளிக்க முடிவு
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் நிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் பாஜக இரண்டிற்கும் பெரும்பான்மை இல்லை என்ற நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது.