மோடி vs ராகுல்.. லோக் சபா தேர்தலை தீர்மானிக்க போகும் ம.பி தேர்தல்.. எப்படி தெரியுமா?
மத்திய பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல்தான் அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
சில வாரம் முன் சட்டிஸ்கரில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களில் மத்திய பிரதேசம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
முக்கியமான மாநிலம்
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதேபோல் 29 லோக் சபா இடங்கள் உள்ளது. இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவதுதான் தேசிய கட்சிக்கு மிகவும் சவாலான விஷயம். நாளை நடக்கும் அம்மாநில தேர்தலில் வெற்றிபெற்றால், அது நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று கருத்துக் கணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பலம் வாய்ந்த கட்சி
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. இந்த 15 வருடங்களில் பாஜக கட்சி அங்கு பெரிய பலம் பொருந்திய கட்சியாக மாறிவிட்டது.
எப்படி பலம்
எப்படியென்றால், அங்கு பாஜக எந்த தேர்தல் நடந்தாலும் மொத்த வாக்குகளில் 45-54 சதவிகித வாக்குகளை பெற்று விடுகிறது. சட்டமன்ற தேர்தல் மட்டுமில்லாமல் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக கட்சி இதே அளவிற்குத்தான் வாக்குகளை பெறுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பாஜகவை விட எப்போதும் 8-12 சதவிகிதம் குறைவான வாக்குகள்தான் பெறுகிறது.
ஆனால் என்ன
ஆனால் தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள் பாஜக மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின் வரும் விஷயங்கள் காரணங்களாக முன்வைக்கப்படுகிறது.
1. 15 வருட பாஜக ஆட்சியில் மத்திய பிரதேசம் பெரிய மாற்றம் அடையவில்லை.
2. மத்திய பிரதேசத்தில் மதம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
3. ஜிஎஸ்டி வரி மத்திய பிரதேச தொழிலாளர்களை பாதித்துள்ளது.
4. டிமானிடைசேஷன் காரணமாக மத்திய பிரதேசத்தின் பொருளாதாரம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
5.பாஜக கட்சி கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இரண்டு சோதனைகள் இருக்கிறது
அதேபோல் பாஜகவிற்கு இரண்டு சோதனைகள் காத்து இருக்கிறது. எப்போதும் பாஜகவிற்கு அதிகம் வாக்களிக்கும் யாதவ் ஜாதியை சேர்ந்த மக்களும், மேல்சாதியை சேர்ந்த மக்களும் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு பாஜக ஆதரவு அளித்த காரணத்தால் அவர்கள் இந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய பிரதேச விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கு மட்டும் வென்றால்
15 வருடமாக பாஜகவின் கோட்டையாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் வென்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியாக இருக்கும். இங்கு வெற்றிபெறுவது மட்டுமே பாஜகவிற்கு எதிராக எவ்வளவு எதிர்ப்பலை இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். இதனால் மத்திய பிரதேச தேர்தலை அரசியல் தலைகள் தீவிரமாக உற்றுநோக்கியுள்ளனர்.