இரவு முழுக்க நடந்த களேபரம்.. தலையிட்ட அமித் ஷா.. ம.பி தேர்தல் முடிவுகள் தாமதமாக வர காரணம் என்ன?
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தாமதமாக வர நிறைய காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறது.
போபால்: மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தாமதமாக வர நிறைய காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறது.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு தேர்தல் முடிவில், வாக்குகளை எண்ண, தேர்தல் ஆணையம் 22 மணி நேரம் எடுத்து இருக்கிறது. மத்திய பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் பெரிய அளவில் சொதப்பி உள்ளது.
மத்திய பிரதேசத்தில், 230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் துணையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
எப்போது தொடங்கியது
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று, புதன் கிழமை அதிகாலை 6.30 மணிக்குத்தான் முடிந்தது. மிகவும் மெதுவாக ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் அங்கு எண்ணப்பட்டது.
காரணம் என்ன சொல்லப்பட்டது
இதற்கு முக்கியமான காரணம் ஒன்று சொல்லப்பட்டது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல், மத்திய பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறைகளை பின்பற்றியது. ஒரு நேரத்தில் ஒரேயொரு சுற்று மட்டும்தான் எண்ணப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பின் அதை பதிவு செய்து, பின் கட்சி நிர்வாகிகள் (30 பேர் வரை இருந்தனர்) எல்லோருக்கும் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துவிட்டு, அதற்கு பின்தான் அடுத்த சுற்றுகளை எண்ணினார்கள். இதனால்தான் முடிவுகள் வர தாமதம் ஆனது என்று கூறப்பட்டது.
வேண்டும் என்றே
ஆனால் இந்த முடிவுகள் வேண்டும் என்றே தாமதமாக வெளியிடப்பட்டதாகவும், இரவு முழுக்க வேண்டும் என்றே வாக்கு எண்ணிக்கை தாமதம் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது. எளிதாக முடிக்க வேண்டிய வாக்கு எண்ணிக்கையை பாஜக கட்டாயப்படுத்தியதன் மூலம் தாமதம் செய்து இருக்கிறார்கள். இரவு வரை முடிவுகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக இப்படி செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கட்டாயம்
அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகளை பாஜக மிரட்டியதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுப்பட்ட ஐஏஎஸ் பணியாளர்களை, தேர்தல் முடிவுகளை உடனே வெளியிட கூடாது, தாமதம் செய்யுங்கள் என்று பாஜக மிரட்டியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.
என்ன காரணம்
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பாஜக இடையே இரண்டில் இருந்து மூன்று இடங்கள் மட்டுமே வேறுபாடு இருந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் அங்கு மாறி மாறி முன்னிலை வகித்தது. அதனால் இரவோடு இரவாக பிரச்சனை செய்யும் நோக்கில், முடிவுகளை மாற்றும் வகையில் பாஜக இப்படி செய்தது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.
அமித் ஷாதான்
அதேபோல் இந்த பிரச்சனைக்கு எல்லாம் பின்னணியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாதான் இருந்தார் என்று காங்கிரஸ் கூறுகிறது. நேற்று அமித் ஷா நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் காலையில் ஆளுநர் எங்களை சந்திக்க ஒப்புக்கொண்டார். இல்லையென்றால் பாஜக பிரச்சனை செய்ய பார்த்திருக்கும் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது.