டோல் பிளாசா ஊழியர்களை போட்டு தாக்கிய பாஜக எம்பி, ஆதரவாளர்கள்!
சுங்க சாவடி ஊழியரை சரமாரியாக தாக்கினார் பாஜக எம்பி. ஒருவர்.
போபால்: யாரை பாத்து என்ன கேக்கிறே? என்ற கேள்வி கேட்டு சுங்க சாவடி ஊழியர் ஒருவரை பின்னி பெடலெடுத்து உள்ளார்கள் பாஜக எம்பி மற்றும் நிர்வாகிகள். அப்படி என்ன அந்த ஊழியர் அவர்களிடம் கேட்டுவிட்டார்???
மத்தியபிரதேச மாநில பாஜக எம்பி நந்தகுமார் சிங் சவுகான். இவர் பாஜக முன்னாள் தலைவரும் கூட. தற்போது அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தீவிர தேர்தல் பணி
இந்நிலையில், அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்திற்கு அந்த மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். 5 நாள் தங்கியிருந்து இந்தூர், ராட்லாம் மற்றும் உஜ்ஜயில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான வேலைகளில்தான் நந்தகுமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
காரில் புறப்பட்டார்
அதற்கான வேலைகளை பார்ப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் நந்தகுமார் காரில் புறப்பட்டார். குணா - சிவ்புரி சாலையில் சென்று கொண்டிருந்தபோத ஒரு சுங்கச்சாவடி வந்தது. அங்கே 2 ஊழியர்கள் இருந்தனர். ஆனாலும் சுங்கச்சாவடியில் கார் நிற்காமல் கடக்க முற்பட்டது.
இவர் யார் தெரியுமா?
அப்போது ஊழியர்களில் ஒருவர் ஓடிவந்து சுங்க கட்டணம் கேட்டார். இதை கேட்டு ஷாக் ஆன நந்தகுமார் ஆதரவாளர்கள், "இவர் யார் தெரியுமா, முன்னாள் பாஜக தலைவர்" என்றனர். அதற்கு அந்த ஊழியர், "ஓ.. அப்படியா... அடையாள அட்டையை காட்டுங்கள்" என்றார்.
வீடியோ வைரல்
இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் மற்றும் ஆதரவாளர்கள் அந்த ஊழியரை சரமாரியாக தாக்க தொடங்கினார். எம்.பி. நந்தகுமார், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கும் இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
|
நந்தகுமார் மறுப்பு
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தினை நந்தகுமார் சிங் செளகான் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிகிறது.