கமல்நாத் தப்பிக்கவா பாக்குறீங்க.. டிவிஷன் முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. ஆளுநரிடம் பாஜக அவசர மனு
போபால்: சட்டசபை, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, கமல்நாத் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாஜக சார்பில் ஆளுநர் லால்ஜி தண்டனிடம், இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கமல்நாத் பதவி வகிக்கிறார். இந்த நிலையில், அந்த கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை துறக்க முன்வந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 22 எம்எல்ஏக்கள், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டும் என்று சபாநாயகர் பிரஜாபதி சம்மன் அனுப்பியுள்ளார். இந்நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று முதல்வர் கமல்நாத் நேற்று அதிரடியாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
ஆளுநரிடம் மனு
அதற்கு பதிலடியாக, இன்று பாஜக குழு, ஆளுநரை சந்தித்து இதுபோல ஒரு மனு, அளித்துள்ளது. அதில், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்றும், அதுவும் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் வேண்டுமே தவிர, குரல் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படக் கூடாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிவிடுவார் என அச்சம்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று கமல்நாத் முன்வந்து கூறியதால், குரல் வாக்கெடுப்பின் மூலமாக அரசைக் காப்பாற்றிக் கொள்ள அவர் திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் பாஜக தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான், இவ்வாறு ஒரு கோரிக்கையை ஆளுநரிடம் அவர்கள் இன்று முன்வைத்துள்ளனர்.
சிவராஜ் சிங் சவுகான்
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், கூறுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். வீடியோ வெளியிட்டு தங்களது ராஜினாமாவை அவர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே தற்போது கமல்நாத் அரசு பெரும்பான்மை இல்லாத ஒரு அரசாக இருப்பதால் அரசியல் சாசனப்படி அந்த அரசு தொடர்வதற்கான எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
ஆளுநர் உரை தேவையில்லை
எனவே சட்டசபையில் ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டியது அவசியம் கிடையாது. அதில் எந்த அர்த்தமும் கிடையாது. பட்ஜெட் கூட்டத்தொடர் தேவையில்லை. எனவே கூட்டத்தொடருக்கு முன்பாகவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஒரு பார்வையாளர் முன்னிலையில் நடத்தப்படவேண்டும். வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கையாக உள்ளது.
பாதுகாப்பு
காங்கிரஸ் கட்சி, தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறது. எங்கள் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடைபெற்றுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அதுவும் மத்திய படையின் பாதுகாப்பில் தாங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அச்சத்தோடு பெங்களூரிலுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருப்பதை ஆளுநர் கவனிக்க வேண்டும். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.