மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்.. முதல்வராக பதவி ஏற்றார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்!
போபால்: மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக பதவி ஏற்று இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் வெறும் ஒன்றரை வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 22 பேர் ஆட்சிக்கு எதிராக திரும்பினார்கள். இவர்கள் கட்சியில் இருந்தும் விலகினார்கள். காங்கிரசில் இளம் மற்றும் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இவர் அதன்பின் பாஜகவில் இணைந்தார். இதுதான் அங்கு அரசியல் மாற்றங்கள் நடக்க காரணம். இதனால் அங்கு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.
இதனால் மூன்று நாட்களுக்கு முன் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக பதவி ஏற்று இருக்கிறார். இவர் இனி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அம்மாநில கவர்னர் லால்ஜி டண்டன் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் சட்டசபையில் 231 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தனர்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் இருந்தனர்.
அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தற்போது 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ் கூட்டணி பலம் 98 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலம் 91 ஆக குறையும். மொத்த அவையின் பலம் 199 ஆக மாறும். பாஜகவின் பலம் எப்போதும் போல 107 ஆகும். மத்திய பிரதேசத்தில் புதிய அவை பலத்தின் படி மெஜாரிட்டி நிரூபிக்க 100 எம்எல்ஏக்கள் தேவை.
வருவாய் இழந்த அமைப்புச் சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த சீமான் கோரிக்கை
பாஜக கட்சியிடம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜகவின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அங்கு எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். முதல்வராக பதவி ஏற்று இருக்கும் சவுகான் அங்கு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.