ம.பி.யில் ஆட்சியை தீர்மானிக்கும் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல்- பெரும் எதிர்பார்ப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதேபோல் 11 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டசபை தொகுதி இடங்கள் காலியாக உள்ள நிலையில் 54 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ல் தேர்தல் நடத்தப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம். மேற்கு வங்கத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகளுக்கு பின்னர் தேர்தல் நடைபெறும்.
இடைத்தேர்தல் மாநிலங்கள்
மத்திய பிரதேசத்தில் நாளை 28 தொகுதிகள்; குஜராத்தில் 8; உத்தரப்பிரதேசத்தில் 7; ஒடிஷா, நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்ட்டில் தலா 2 தொகுதிகள்; சத்தீஸ்கர், தெலுங்கானா, ஹரியானாவில் தலா 1 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
காங். எம்.எல்.ஏக்கள்
மத்திய பிரதேசத்தில் 22 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் 15 மாத கால கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பாஜகவில் ஐக்கியமாகினர். அத்துடன் 3 எம்.எல்.ஏக்கள் காலமாகினர். இதனால் ம.பி.யில் மொத்தம் 28 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
2018 தேர்தல் முடிவுகள்
மத்திய பிரதேசத்தில் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் 114 தொகுதிகளில் வென்றது. 230 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ம.பி. சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 116 எம்.எல்.ஏக்கள். காங்கிரஸுக்கு 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. இந்த நிலையில் 4 சுயேட்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள், சமாஜ்வாதி எம்.எல்.ஏ. ஒருவர் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.
காங். அரசு கவிழ்ப்பு
ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் கலகம் வெடித்ததால் 22 எம்.எல்.ஏக்கள் கமல்நாத் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதனால் காங்கிரஸ் பலம் 88 ஆக குறைந்தது. மேலும் கமல்நாத் அரசு கவிழ்ந்தது சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பாஜக அரசு அமைந்தது.
ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?
தற்போதைய நிலையில் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு உள்ளனர். பாஜக எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆட்சியை தொடர வேண்டுமானால் மேலும் 9 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆகையால் பாஜக 9 தொகுதிகளில் வென்றாக வேண்டும்: காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்றால்தான் மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும். குறைந்தபட்சம் 21 தொகுதிகளிலாவது காங்கிரஸ் வென்றால் ம.பி. அரசியலில் மீண்டும் புயல் வீசும் என்பதால் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.