ம.பி.யில் நெருங்கும் சட்டசபை தேர்தல்: அரையிறுதியில் காங். அமோக வெற்றி.. பறிபோகிறதா பாஜக ஆட்சி?
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இவ்வாண்டு இறுதியில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜகவுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முங்கோலி, கோலாரஸ் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக இருந்த மகேந்திர சிங், ராம் சிங் யாதவ் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து,
கடந்த மாதம் 24ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இரு தொகுதிகளையும் மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
பாஜக ஆட்சி
மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் 14 வருடங்களாக தொடர்ந்து பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இறுதியில் சட்டசபைக்கு பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இவ்விரு இடைத் தேர்தல்களும் அரையிறுதி போட்டியாக பார்க்கப்பட்டன. அில் காங்கிரஸ் எளிதாக வென்றுள்ளது.
ஆளும் கட்சி
ஆட்சி பலம், படை பலம், பண பலம், அதிகார பலம் என அனைத்தும் இருந்தும், பாஜக தோற்றுள்ளதை வைத்து பார்க்கும்போது, சட்டசபை பொதுத் தேர்தலிலும், காங்கிரஸ் வெற்றி தொடரும் என்றும் ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். கடந்த ஆண்டில் அடேர் மற்றும் கஜுராகோ தொகுதிகளையும் காங்கிரஸ் வென்றது. எனவே தொடர்ச்சியாக 4 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியும், பாஜக தோல்வியும் அடைந்துள்ளது.
ஜோதிராய்தா சிந்தியா
காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணம், அக்கட்சி எம்.பியும், மத்திய பிரதேசத்தின் பிலபல இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவருமான ஜோதிராத்யா சிந்தியாவாகும். சிவராஜ்சிங் சவுகான் களமிறங்கி தீவிர பிரசாரம் செய்தும்கூட 2 தொகுதிகளிலும் பாஜக தோற்க ஜோதிராத்யா சிந்தியாவின் வியூகங்களும், மக்களிடம் அவருக்குள்ள மரியாதையும்தான் காரணம். வரும் பொதுத் தேர்தலில், ஜோதிராத்யா சிந்தியாவை காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிக்கு வாய்ப்பு அதிகம் என்ற பேச்சுக்கள் அக்கட்சியின் உள்ளே எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
விவசாயிகள் எதிர்ப்பு
முங்கோலி தொகுதியில் பாஜக வேட்பாளரை விட சுமார் 2,000 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதேபோல, கோலாரஸ் தொகுதியில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. விவசாயிகள் அரசுக்கு எதிராக திரும்பியதுதான் இந்த தோல்விக்கு காரணம் என்றும், பொய்யான வாக்குறுதிகளை சிவராஜ்சிங் சவுகான் தொடர்ந்து கொடுத்து வருவதை விவசாயிகள் ஏற்கவில்லை என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை சமீபத்தில் சவுகான் அறிவித்தும் கூட அவரை நம்புவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை என்பதையே தேர்தல் ரிசல்ட் காட்டுகிறது.