இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்!
போபால்: இலங்கையில் சீதா தேவிக்கு கோவில் கட்டப்படும் என்று மத்திய பிரதேசத்தில் ஆளக்கூடிய காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. ஆமாங்க.. காங்கிரஸ் அரசேதான்.
ராமாயண இதிகாசத்தின் படி சீதாதேவி, ராவணனால் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டார். இதன் பிறகு ராமர் தனது சேனைகளுடன் இலங்கை சென்று, சீதையை மீட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு, தனது கற்பை நிரூபித்து காண்பிப்பதற்காக, சீதை தீக்குளித்து மீண்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் இலங்கையில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில்தான், இந்த சம்பவத்தை புனிதப்படுத்தும், அடிப்படையில், இலங்கையில் சீதாதேவிக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ
முதல்வர் அனுமதி
சமீபத்தில், அந்த மாநிலத்தின் சட்டம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் பிசி சர்மா தலைமையிலான ஒரு குழு இலங்கை சென்று அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து சீதாதேவி கோயில் கட்டும் திட்டம் தொடர்பாக ஆலோசித்தது. இலங்கை அரசும் இதற்கு சரி என்று சம்மதித்தது. இந்த நிலையில் தான் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் இன்று இந்த திட்டத்திற்கு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.
பாஜக அரசு திட்டம்தான்
சிவராஜ் சவுகான் தலைமையில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது, இந்த திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் மத்திய பிரதேசத்தில் அமைந்தது. முந்தைய அரசின் திட்டம்தான் இது என்பதால் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறோம் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
பாஜக, காங்கிரஸ்
பிரமாண்டமான இந்த கோவிலுக்கு தேவைப்படும், நிதி இந்த நிதியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்று முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மத்திய மாகாணமான, திவூரம்போலாவில் உள்ள புத்த மடாலயம் பகுதியில், இந்த கோவில் அமைக்கப்படவுள்ளது. ராமருக்கு அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்ட மத்திய பாஜக அரசும், உ.பி. பாஜக அரசும் தீவிரமாக முயலும் நிலையில், காங்கிரஸ் அரசு சீதா தேவிக்கு கோவில் அமைக்க முன்வந்துள்ளது, ஆச்சரியம்தானே.
கோவில் கட்டப்படுவது எப்போது?
சீதாதேவி அணிந்திருந்த ஆபரணங்கள், இந்தப் பகுதியில்தான் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மக்கள் நம்புகிறார்கள். எனவே, இலங்கை மக்களும், சீதைக்கு அமைக்கப்பட உள்ள கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சீதா தேவி கோவில் எவ்வளவு நாளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.