40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை..ம.பி. பாஜக அரசு அதிரடி!
மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
போபால்: மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு ஆதார் போலவே அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக தற்போது 2.5 மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அடையாள அட்டையில் மாடுகளில் புகைப்படம் இருக்காது. ஆனால் ஆதார் அட்டை போலவே 12 இலக்க அடையாள எண் இருக்கும்.
மேலும் உரிமையாளரின் பெயர், முகவரி, மாடின் விலாசம் ஆகியவை இருக்கும். இன்னும் 37.5 லட்சம் மாடுகளுக்கு 2 மாதங்களுக்குள்ளாக அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
என்ன காரணம்
மாடுகளின் வளர்ச்சி, பால் கறக்கும் தன்மை, எத்தனை குட்டி போடுகிறது என நிறைய விஷயங்களை கண்காணிக்க இந்த அடையாள அட்டை உதவும் என்று கூறப்படுகிறது. ஆதார் அட்டை போலவே இருக்கும் இந்த அட்டையை நிர்வகிக்க தனி குழு ஒன்றை மத்திய பிரதேச அரசு நியமித்துள்ளது.
ஆண்ட்ராய்ட்
இதற்காக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. ''ஐஎன்எபிஎச்' எனப்படும் இந்த அப்ளிகேஷனில் இந்த மாடுகள் குறித்த தகவல்கள் ஏற்றப்படும். இதன் மூலம் மாடுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சி, குறைபாடு கண்காணிக்கப்பட்டு, அதில் தகவல்கள் பதிவேற்றப்படும்.
ஆதார் அட்டை
ஆனால் இந்த விஷயம் இதோடு முடியவில்லை. இந்த 12 இலக்க எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அந்த மாட்டிற்கு உரிமையாளர்கள் யாரோ அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைத்து தகவல்களை அதில் ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏப்ரல் 1ல் இருந்து இந்த பணி தொடங்கும்.
பசு பாதுகாப்பு
இது பால் உற்பத்தி மட்டுமில்லாமல் பசுக்களை பாதுகாக்கவும் உதவும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. அதன்படி பசுவதை, பசுக்களை கடத்துதல் ஆகியவை தடுக்க முடியும். முக்கியமாக பசுக்களை திருடு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். பசுக்களை விற்க வேண்டும் என்றால் சரியான 12 இலக்க எண்ணை கூறி மட்டுமே விற்க முடியும்.