ம.பி.யில் கமல்நாத் அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் உத்தரவு- மீறினால் ஆட்சி டிஸ்மிஸ்?
போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோராவிட்டால் பெரும்பான்மை இல்லை என முடிவெடுக்க நேரிடும் என்று ஆளுநர் லால்ஜி கூறியிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளித்த 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இவர்களில் 6 அமைச்சர்களின் ராஜினாமா மட்டும் ஏற்கப்பட்டது.
இந்நிலையில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் சட்டசபையில் அதை நிரூபிக்கவும் தயார் என ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் முதல்வர் கமல்நாத் கூறியிருந்தார். இதனடிப்படையில் சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இன்று சட்டசபை கூடியபோதும் அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் சட்டசபை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய பிரதேச அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டது.
முதல்வர் கமல்நாத் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆளுநரிடம் மீண்டும் பாஜக முறையிட்டது. அத்துடன் உச்சநீதிமன்றத்தையும் நாடியது. இதனிடையே முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், சட்டசபையில் நாளை மார்ச் 17-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு கோராவிட்டால் உங்களுக்கு பெரும்பான்மை இல்லை என முடிவெடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார் ஆளுநர் லால்ஜி டாண்டன். இதனால் மத்திய பிரதேசத்தில் புதிய பரபரப்பு நிலவுகிறது.