வெங்காய விளைச்சல் அதிகரிப்பு: மக்களுக்கு இலவசமாக தரும் மத்திய பிரதேச அரசு
போபால் : தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ரேசன் கடைகளில் இலவச அரிசி கொடுப்பதை போல மத்திய பிரதேச மாநில அரசு இலவச வெங்காயத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களுக்கு வெங்காயத்தை இலவசமாக வழங்க மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயம் அழுகி போவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த வருடம் மே மாதம் அதிகளவிலான வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் இதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தியது.
உலகின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக நாசிக் நகரம் திகழ்கிறது. ஆனால் வெங்காயத்தைப் பயிரிடும் விவசாயிகள் அதற்குரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
எனது நிலத்தில் விளைந்த 1300 கிலோ வெங்காயத்திற்கு மார்க்கெட்டில் கிடைத்த விலை 65 ரூபாய். இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயத்திற்கு நான் பெற்றது வெறும் 5 பைசாதான் என்கிறார் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிஒருவர்.
ஒரு ஏக்கர் வெங்காயத்திற்கு கிடடத்தட்ட 700 ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இந்த வெங்காயத்தை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல 780 ரூபாய் செலவு செய்தேன். கடைசியில் வெங்காயத்தை பயிர் செய்த நிலத்திலேயே அவற்றைக் கொட்டும் அவலம் நேர்ந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளார் சுதாகர் என்ற அந்த விவசாயி.
இதுகுறித்து விவசாய விளைபொருட்கள் சந்தை குழு (APMC) சுதாகர் கொண்டு வந்த வெங்காயத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதனால்தான் அவரது வெங்காயத்திற்கு விலை குறைவாகக் கிடைத்தது. ஆனால், நல்ல நிலையில் இருக்கும் வெங்காயம் ஒரு குவிண்டால் 600- 700 ரூபாய் வரை விலை போகிறது என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.
சுதாகர் கொண்டு வந்த வெங்காயம் ஈரத்துடன் இருந்ததால்தான் அவரது வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வெங்காய வர்த்தகர் ஒருவரும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அதிக அளவில் வெங்காயத்தை பயிரிட்டனர்.
வெங்காயம் விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கிலோவுக்கு ரூ.6 என்றளவில் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதன்படி விவசாயிகளிடமிருந்து 10.4 லட்சம் குவிண்டால் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.
பருவமழை காலம் துவங்கிய நிலையில், உரிய சேமிப்பு கிடங்குகள் இல்லாததால், வெங்காயங்கள் அழுக துவங்கின. இதனையடுத்து கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்ய மாநில அரசு விற்க எண்ணியது. ஆனால், மிகக்குறைந்த விலை வெங்காயத்தை வாங்குபவர்கள் நிர்ணயம் செய்தனர்.
இந்நிலையில், வெங்காயத்தை இலவசமாக விநியோகம் செய்ய மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயத்தை கொண்டு செல்வதற்கான செல்வுக்காக கிலோவுக்கு ரூ.1 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரூ.3.28 லட்சம் குவின்டால் வெங்காயம் இலவசமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.