ராஜினாமா செய்யும் திட்டத்தில் கமல்நாத்.. ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக பிளான்.. ம.பியில் திருப்பம்!
மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி இழந்து இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
போபால்: மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி இழந்து இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 23 பேர் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இதில் 22 எம்எல்ஏக்கள் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரசில் இளம் மற்றும் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுதான் அங்கு அரசியல் மாற்றங்கள் நடக்க காரணம். இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் உச்சகட்ட பரபரப்பு.. 6 அமைச்சர்கள் உட்பட 16 காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் சென்றனர்
எத்தனை எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் 23 எம்எல்ஏக்கள் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் சட்டசபையில் 231 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தனர்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் இருந்தனர்.
மெஜாரிட்டி எப்படி
அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தற்போது 23 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ் கூட்டணி பலம் 97 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலம் 90 ஆக குறையும். மொத்த அவையின் பலம் 198 ஆக மாறும். பாஜகவின் பலம் எப்போதும் போல 107 ஆகும். மத்திய பிரதேசத்தில் புதிய அவை பலத்தின் படி மெஜாரிட்டி நிரூபிக்க 100 எம்எல்ஏக்கள் தேவை.
பாஜக எம்எல்ஏக்கள்
பாஜக கட்சியிடம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜக எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆகவே பாஜக இன்று மாலையே சபாநாயகரிடம் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் அளிக்கும் என்கிறார்கள். நாளை காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
ஆலோசனை
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார்கள். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல், கமல்நாத் ஆட்சியை கலைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்றே கமல்நாத் பதவி விலக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அப்படி பதவி விலகினால் அங்கு பாஜக ஆட்சி அமைக்க இன்று இரவே உரிமை கோரும். அப்படி இல்லையென்றால் அதிகபட்சம் நாளை மாலைக்குள் அங்கு பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்கிறார்கள்.