மத்திய பிரதேசத்தில் உச்சகட்ட பரபரப்பு.. 6 அமைச்சர்கள் உட்பட 16 காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் சென்றனர்
போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக காங்கிரஸில் கிளர்ச்சி வெடித்துள்ளது. அவரது அமைச்சரவையில் உள்ள ஆறு அமைச்சர்கள் உட்பட 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவின் பெங்களூருக்கு வந்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன மத்திய பிரதேச அரசியலில் குழப்பம் வெடித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கர்நாடகா பாணியில் ஆட்சியில் அமர பாஜக ஆப்ரேசன் கமல் திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் ஒரு பகுதியாக பாஜகவுக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேர் டெல்லியில் இருந்து மூன்று விமானங்கள் மூலம் மதியம் 3:30 மணியளவில் பெங்களூரு வந்தடைந்தனர்.
ஆறு அமைச்சர்கள்
பிரமுகன் சிங் தோமர், துளசி சிலாவத், கோவிந்த் ராஜ்புத், பிரபுராம் சவுத்ரி, டிம்பர் தேவி, மகேந்திர சிசோடியா உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் மற்றும் ஜஸ்பால் ஜஜ்ஜி, ரன்வீர் ஜாதவ், கமலேஷ் ஜாதவ், ஜஸ்வந்த் ஜாதவ், ரக்ஷா சிரோனியா, ராஜ்வர்தன் சிங், ஓ.பி.எஸ் படோரியா, கிரிராஜ் தண்டோடியா, பிஜேந்திர யாதவ், முன்னா லால் கோயல், சுரேஷ் தக்காத், ரகுராஜ் கசனா, ஹர்தேப் சிசனா ஆகியோர் உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களும் பெங்களூரு வந்துள்ளனர்
கமல்நாத்துக்கு பாதகம்
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைத் தவிர, மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் ஆறு பாஜக எம்.எல்.ஏக்களும் போபாலில் இருந்து பெங்களூரை அடைந்துள்ளனர். முதல்வர் கமல்நாத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தனது அரசாங்கம் பாதுகாப்பானது என்றும் கட்சி அதன் எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினாலும், போபால், பெங்களூரு மற்றும் புதுடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கமல்நாத்துக்கு சாதமாக இல்லை..
எம்எல்ஏக்கள் கிளர்ச்சி
இதற்கிடையில், போபாலில் உள்ள முதல்வர் கமல் நாத்தின் இல்லத்தில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த . கூட்டத்தில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அப்போது ஆட்சியை தக்கவைப்பது தொடர்பாகவும் கிளர்ச்சி செய்து பாஜகவுக்கு ஆதரவாக பெங்களூரு சென்ற எம்எல்ஏக்கள் குறித்து விவாதிக்கவும் கூடும்.
பாஜக நாளை கூட்டம்
பாரதீய ஜனதா கட்சியின் மத்திய பிரதேச பிரிவு நாளை போபாலில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற கட்சி கூட்டத்தை நடத்தப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
மார்ச் 16 ஆம் தேதி மத்தியப் பிரதேச சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கமல்நாத் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 16 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற வைத்து கமல்நாத் அரசை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.