அந்த இளைஞர் குடித்திருந்தார்; வீடியோ பொய்யானது - வாலிபரை எட்டி உதைத்த விவகாரத்தில் ம.பி அமைச்சர்!
போபால்: ம.பியில் பிச்சை கேட்க வந்த வாலிபரை தன் காலால் உதைத்ததாக வெளியான வீடியோ முற்றிலும் பொய்யானது என்றும், காலில் விழுந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாகவும் அமைச்சர் குசும் மெதலே தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் குசும் மெதலே, கடந்த அரசு நிகழ்வுக்காக பண்ணா மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை முடித்துவிட்டு தான் புறப்பட வேண்டிய காரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த போது தன்னிடம் பிச்சை கேட்டு வந்த வாலிபரை குசும் மெதலே காலால் தள்ளிவிட்டதாக ஒரு விடியோ பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் குசும் மெதலே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, பிச்சைக் கேட்டு வந்த வாலிபரை காலால் உதைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு குசும் மெதலே மறுப்பு தெரிவித்துள்ளார். இளைஞர் ஒருவர் குடிபோதையில் நிதானம் இழந்து தன்னுடைய கால் அருகே வந்து விழுந்ததாகவும், அந்த இளைஞர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
"செய்தியாளர்களுக்கு பதிலளித்தபடி நான் சாலையில் சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் என் காலடியில் வந்து விழுந்தார். அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை. அந்த வாலிபரின் முகத்தை கூட நான் பார்க்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. தொலைக்காட்சிகளில் வரும் வீடியோ முற்றிலும் பொய்யானது." என்று அவர் தெரிவித்துள்ளார்.