போராடிய விவசாயிகளின் ஆடை அவிழ்ப்பு.. மத்திய பிரதேசத்தில் காவல்துறை அராஜகம்
போபால்: போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை போலீசார் களைய செய்து உள்ளாடையுடன் நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை போலீசார் களைய செய்து உள்ளாடையுடன் நிறுத்திய சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு நாடு முழுக்க பிரச்சினைதான் நிலவுகிறது. எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் வயிற்றில் அடித்துக்கொண்டு போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அரசு நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது.
இதேபோலத்தான், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பண்டல்கண்டில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
ஆனால், இதிலும் வழக்கம்போல அரசியல் சாயம் கலக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசின் தூண்டுதலின்பேரிலேயே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக ஆளும் பாஜக குற்றம்சாட்டியது. எனவே விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியுள்ளனர்.
Protesting farmers allegedly stripped and thrashed by Police in Madhya Pradesh's Tikamgarh; CM Shivraj Singh Chouhan orders probe. pic.twitter.com/OBb6RHtopR
— ANI (@ANI) October 4, 2017
பின்னர் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து அவர்களை கட்டாயப்படுத்தி ஆடைகளை அவிழ்த்து உள்ளாடையுடன் நிற்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் ஆடைகளை அவிழ்க்க செய்து காவல்துறையினர் அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் ஆடைகள் அவிழ்க்கப்பட்ட புகைப்படத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்த பிரச்னையை மனித உரிமைகள் ஆணையத்திடம் கொண்டு செல்ல உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.