ஷாக்..! டெல்டா+ கொரோனா.. மத்திய பிரதேசத்தில் முதல் உயிரிழப்பு.. வேக்சின் போடாததே காரணம் என தகவல்
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் புதிய உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனாவால் தனது முதல் உயிரிழப்பைப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்த அந்த பெண் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வருகிறது. கடந்த சில நாட்களாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது.
இருப்பினும், தற்போது கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வகை புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையில் கேள்வி கணைகளால் துளைக்கும் செந்தில் பாலாஜி.. பதில் இன்றி தவிக்கும் முன்னாள் அமைச்சர்கள்
டெல்டா பிளஸ்
நாட்டில் சுமார் 40 கொரோனா நோயாளிகளுக்கு உருமாறிய டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. டெல்டா பிளஸ் கொரோனா அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
மத்தியப் பிரதேசம் உயிரிழப்பு
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 5 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் நான்கு பேர் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேநேரம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவால் பதிவு செய்யப்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும்.
வேக்சின்
டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த மே 23ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் கணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியிருந்ததால், அவர் கொரோனாவில் எளிதாக இருந்து மீண்டுவிட்டார். அந்தப் பெண் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் கருத்து
இது குறித்து அம்மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தில் நிலைமையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்து வருகிறோம். அப்படி தொடர்பில் இருந்தவர்களில் யாருக்கும் இதுவரை கொரோனா உறுதி செய்யப்படவில்லை. டெல்டா பிளஸில் இருந்து மீண்ட நால்வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள். இதில் வேக்சின் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது" என்றார்.
டெல்டா பிளஸ் கொரோனா என்ன
டெல்டா வகை மேலும் உருமாறி, டெல்டா பிளஸ் கொரோனா உருவாகியுள்ளது. இந்த டெல்டா பிளஸ் கொரோனா K417N என்ற பிறழ்வைக் கொண்டுள்ளது. அதாவது கொரோனா வைரசின் வெளிப்புறத்தில் இருக்கும் புரத ஸ்பைக்கில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா இம்யூன் எஸ்கேப் ஆற்றலையும் பெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது ஆன்டிபாடிகளின் பலன் குறையலாம்.