மத்திய பிரதேச பாடப்புத்தகத்தில் 'முஷாரப்" சிறந்த தலைவராக புகழாரம்- வெடித்தது சர்ச்சை
போபால்: மத்திய பிரதேச பாடப்புத்தகத்தில் பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப்பை, சிறந்த தலைவராக புகழாரம் சூட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 3வது வகுப்பு பாடப் புத்தகத்தில் உலகின் 6 சிறந்த தலைவர்களின் புகைப்படமும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் திபெத் தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானின் அதிபரான பர்வேஷ் முஷாரப், 1999-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் மூளுவதற்கு காரணமாக இருந்தவர். அவரை உலகின் சிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம் பெறச் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநில கல்வி வாரியத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.