ம.பி.யில் வீர சாவர்க்கர் படம் தாங்கிய நோட்டு, புத்தகங்கள்... அரசுப்பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்
போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வீர சாவர்க்கர் படம் தாங்கிய நோட்டு புத்தகங்களை விநியோகித்த தலைமையாசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வீர சாவர்க்கர் படத்தை நோட்டு புத்தகங்களில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் அச்சடித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீரசாவர்க்கர் வாழ்க்கை வரலாறு குறித்த குறிப்புகளும் அந்த நோட்டு புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்த இந்திரா காந்தி... சஞ்சய் ராவத் கருத்தால் காங். கடும் அதிருப்தி
வீர சாவர்க்கர்
சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவரும், தீவிர இந்துத்துவா கொள்கை உடையவருமான வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திர போர் என்ற தலைப்பில் புத்தகம் கூட இவர் எழுதியிருக்கிறார். அவரின் கொள்கைகளை செயலாக்கம் செய்வதில் ஆர்.எஸ்.எஸ். தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சாவர்க்கர் படம்
ம.பி. மாநிலம் ராட்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வீரசாவர்க்கர் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் அடங்கிய நோட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இது தொடர்பான புகார் கிடைத்ததை அடுத்து ஆய்வு செய்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அது தொடர்பான ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பினர்.
நடவடிக்கை
இதையடுத்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் கோராவாட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளானார். இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தலைமையாசிரியர் மீது பழிவாங்கும் நோக்கோடு காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் சாடியுள்ளனர்.
தலைமையாசிரியர்
என்.ஜி.ஓ. அமைப்பினர் அரசின் அனுமதி பெற்றுவிட்டதாக கூறியதால் தான், வீரசாவர்க்கர் படம் தாங்கிய நோட்டு புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு தாம் விநியோகித்ததாக விளக்கம் கூறியுள்ளார் கோராவாட். இருப்பினும் அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.