ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்
போபால்: ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென புதிதாக சாலைகள் போடப்படும் என பேசி மத்திய பிரதேச மாநில அமைச்சர் பி.சி.சர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா பாஜக எம்.பியும், நடிகையுமான ஹேமமாலினி கன்னத்தை உவமையாக கொண்டு பேட்டியளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலை பழுதடைந்துள்ளதாக வந்த புகார்களை அடுத்து ஆய்வு நடத்திய அமைச்சர் சர்மா, தற்போதுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பாஜக தலைவர் விஜய்வர்கியாவின் கன்னங்களை போல் உள்ளது என்றும், விரைவில் அந்த சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்களை போல் பளபளவென மாற்றி அமைக்கப்படும் என உளறியுள்ளார்.
இவரது கருத்து மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சர் சர்மாவை கிண்டல் அடித்தும், திட்டியும் பலர் விமர்சனங்களை வைத்துள்ளனர். பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அமைச்சரின் கருத்து உள்ளதாக மாதர் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சோனியாவை செத்த எலி என விமர்சித்து ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அரசியலில் பிரபலமாகவும், ஒரே இரவில் ஊடக வெளிச்சத்தை பெறவும் இதுபோன்ற ஏற்கமுடியாத விமர்சனங்களை முன்வைப்பது நாடு முழுவதும் சமீபகாலமாக தொடர்கதையாகி வருகிறது.