மெட்ராஸ் ஹைகோர்ட் இன்று முதல் சென்னை ஹைகோர்ட் என்று அழைக்கப்படும்
டெல்லி: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இனிமேல் சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். கல்கத்தா உயர்நீதிமன்றம் இனிமேல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் என்றும், பாம்பே உயர்நீதிமன்றம் இனிமேல் மும்பை உயர்நீதிமன்றம் என்றும் பெயர் மாற்றம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
"மெட்ராஸ்' என்று இருந்த நகரின் பெயர் சென்னை என மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, "மெட்ராஸ் ஹைகோர்ட்' என்ற பெயரை "சென்னை ஹைகோர்ட்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம், 1861-இன்படி அப்போதைய மெட்ராஸில் அமைந்த உயர் நீதிமன்றத்துக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தச் சட்டம் பின்னர் நீக்கப்பட்டது.
"மெட்ராஸ்' என்று இருந்த தமிழகத் தலைநகரின் பெயர், 1996இல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது "சென்னை' என மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆகியவை நீங்கலாக மற்ற அமைப்புகளின் பெயர்கள் சென்னை என மாற்றப்பட்டன.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் பெயரை "மெட்ராஸ்' என்பதற்கு பதிலாக சென்னை என மாற்றினால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் "மெட்ராஸ்' என அழைக்கப்பட்டு வந்த நகரின் வரலாறு பிற்காலத்தில் வருவோருக்கு தெரியாமல் போய் விடும் என்று ஒரு தரப்பு கூறியது.
இதைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தின் பெயரை "சென்னை உயர் நீதிமன்றம்' என மாற்றும் யோசனையை கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உரிய சட்டம் இயற்றும் முன்பு அனைத்து அம்சங்களும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தது.
இதன்படி இன்று மோடி தலைமையிலான அமைச்சரவை கூடி நீதிமன்றத்தின் பெயர் மாற்றத்தில் ஒப்புதல் அளித்தது. இன்று முதல் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று
இதேபோல, பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயரை முறையே மும்பை கொல்கத்தா என மாற்றுவதற்கான இரு மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தன. மகராஷ்டிரா தலைநகரமான பம்பாய் 1995ம் ஆண்டு மும்பை என மாற்றப்பட்டது. மேற்கு வங்காளத்தில் தலைநகரமான கல்கத்தா 2011ம் ஆண்டு கொல்கத்தா என மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பெயர் மும்பை உயர்நீதிமன்றம் என்றும், கல்கத்தா உயர்நீதிமன்றம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் என்று இன்று முதல் பெயர்மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல குமரி மாவட்டம் குளச்சல் அருகே இணையத்தில் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.