சித்தம் தெளிய ‘சித்தராமையா’வுக்கு லெமன் பார்சல்... மதுரை இந்து மக்கள் பேரவை குறும்பு!
மதுரை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி நீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எலுமிச்சை பழத்தையும், திருக்குறள் புத்தகத்தை மதுரை இந்து மக்கள் பேரவையினர் தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட காவிரி நீரை திறந்துவிட தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது கர்நாடக அரசு. இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக இருமாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வேண்டி தமிழகத்திலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக அரசின் போக்கை கண்டித்து மதுரை இந்து மக்கள் பேரவையினர் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு 'சித்தம்' தெளிய எலுமிச்சை பழத்தையும், 'அறிவை வளர்க்க' திருக்குறள் புத்தகத்தையும் அவர்கள் தபாலில் பார்சல் அனுப்பி வைத்தனர்.