சர்ச்சைகளால் அச்சமா?.. வாடிக்கையாளர் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது மேகி!
டெல்லி: மேகி நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளை பெற்று அதற்கு பதிலளித்து வருகிறது. அதன் நூடுல்சிலுள்ள ஆரோக்கியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மேகி விடையளித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக கேடுவிளைவிக்கும் மூலப்பொருள் இருப்பதால் அதன் வி்ற்பனைக்கு இந்தியாவின் பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு நெஸ்லே விடையளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவன வெப்சைட்டில் இதற்காக கேள்வி-பதில்கள் தயாராக உள்ளன.
அதில் நெஸ்லே கூறுகையில், எங்கள் நிறுவனம், 1000 பேட்ஜ் மேகிகளை சோதனைக் கூடத்தில் வைத்து பரிசோதித்து பார்த்துள்ளது. அதில் இந்திய தர நிர்ணய அளவுக்கு உட்பட்டுதான் மூலப்பொருள் உள்ளது. இவ்வாறு நெஸ்லே குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகங்களை குறிப்பிட்டு அதற்கான இமெயில் முகவரியையும் அதில் தெரிவித்துள்ளது. உதாரணத்துக்கு, ஏற்கனவே வீடுகளில் வாங்கி வைக்கப்பட்ட மேகி பாக்கெட்டுகளை என்ன செய்வது என்ற கேள்வியை கேட்டுள்ள நெஸ்லே நிறுவனம், இதுகுறித்து கஸ்டமர் கேருக்கு போன் செய்து விவரம் கேட்டுக்கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படியும் சந்தேகம் இருந்தால், இ-மெயிலில் தொடர்புகொள்ளலாம் என்று கூறி இ-மெயில் முகவரியையும் நெஸ்லே அளித்துள்ளது.