மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது: ஆய்வக அறிக்கையை அடுத்து விற்பனையை துவங்கும் நெஸ்லே
டெல்லி: புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸ் சாப்பிட பாதுகாப்பானது என்று அரசு ஆய்வகங்கள் அறிக்கை அளித்துள்ளதையடுத்து இந்த மாதம் அதன் விற்பனை மீண்டும் துவங்கப்படும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவனம் சந்தையில் இருந்து மேகி நூடுல்ஸை வாபஸ் பெற்றது. மேலும் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிமெண்ட் ஆலைகளில் வைத்து அழிக்கப்பட்டன.
இந்நிலையில் மேகி நூடுல்ஸ் தயாரிப்பை மீண்டும் துவங்கி அதை 3 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வில் அது சாப்பிட பாதுகாப்பானது என்று கூறப்பட்டால் மீண்டும் விற்பனையை துவங்கலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் மீண்டும் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு துவங்கியது. புதிதாக தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் 3 அரசு ஆய்வகங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வில் மேகி நூடுல்ஸ் சாப்பிட பாதுகாப்பானது என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த மாதத்திலேயே நூடுல்ஸ் விற்பனை மீண்டும் துவங்கப்படும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.