மைசூரில் லேபில் "மேகி" நூடுல்ஸை பரிசோதிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: மேகி நூடுல்ஸ் மாதிரியை மைசூருவில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நெஸ்ட்லே நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான காரியம் கலந்திருப்பதாக கூறி, அதனை விற்பனை செய்யவும், தயாரிக்கவும் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த ஜூன் மாதம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மேகி நூடுல்ஸை நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெறப்பட்டது.
எனினும் எங்களது தயாரிப்பான மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்றும் விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் மஹாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை மறு பரிசோதனை செய்ய மஹாராஷ்டிரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வகப் பரிசோதனையில் மேகி நூடுல்ஸில் பாதுகாப்பானது என்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் மஹாராஷ்டிராவில் மேகிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக கர்நாடகா மற்றும் குஜராத் மாநில அரசுகள் மேகி மீதான தடை உத்தரவை திரும்ப பெற்றன.
மேகி நூடுல்ஸ் உற்பத்தியை 3 மாநிலங்களில் உள்ள ஆலைகளில் தொடங்கியிருப்பதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பழையபடி நெஸ்லே நிறுவனம் முழு அளவில் மேகியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இதனிடையே மேகி நூடுல்ஸ் தடை நீக்கத்தை எதிர்த்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நெஸ்ட்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ்சின் மாதிரியை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பான வழக்கில், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனை எதிர்த்து இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நெஸ்ட்லே நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் உள்ள மைசூரு பரிசோதனைக் கூடத்தில் மேகி நூடுல்ஸை மீண்டும் பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கு விசாரணையை ஜனவரி 13ம் தேதிக்கும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.